அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக் கடலில் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக உருவாகி, அந்தமான், நிக்கோபார் பகுதிகளை தாக்கும் ஆபத்து உள்ளது.
இதையடுத்து அந்தமான், நிக்கோபார் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் சனிக்கிழமை (மார்ச் 19) முதல் வரும் 22 ஆம் தேதி செவ்வாய் கிழமை வரை மூடப்பட்டுள்ளன.
எனவே அந்தமான், நிக்கோபாார் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் இந்த நாள்களில் வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டிலிருந்து அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை சமீப நாள்களில் அதிகரித்துள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமானுக்கு தினமும் 9 பயணிகள் விமானங்கள் செல்கின்றன. அந்த 9 விமானங்களில் 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் செல்கின்றனர்.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா பயணிகளாக செல்பவர்கள். இதையடுத்து சென்னையிலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அங்கு அவதிப்பட கூடாது என்பதற்காக சென்னை விமான நிலைய அலுவலர்கள் புயல் எச்சரிக்கை அந்தமானில் சுற்றுலா தளங்கள் 22ஆம் தேதி வரை மூடப்பட்டு இருப்பது பற்றி அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
அதோடு சுற்றுலாவுக்காக அந்தமான் செல்லும் பயணிகள் தங்களுடைய பயணிகளை வரும் 22ஆம் தேதி வரை தவிர்ப்பது நல்லது என்று அறிவுரை கூறுகின்றனர். மேலும் அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் இந்த தேதிகளில் டிக்கெட்கள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு செல்போன்களில், புயல் எச்சரிக்கை பற்றிய குறுந்தகவலையும் அனுப்புகின்றனர்.
இதனால் சுற்றுலா செல்வதற்காக வந்த பயணிகள் சிலர் இந்த அறிவிப்புகளைப் பார்த்துவிட்டு தங்களுடைய பயணங்களை ரத்து செய்வது அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுவது போன்ற வழிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு...' - ஆசிரியர்களிடம் அத்துமீறிய தேனி மாணவன்