புதுச்சேரியில் அதிவேகமாக சென்ற கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; சிசிடிவி காட்சி வெளியீடு..
Published : Jan 27, 2024, 3:32 PM IST
புதுச்சேரி: தொடர் விடுமுறை முன்னிட்டு கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த கார் நேரு வீதி வழியாக நேற்று (ஜன.26) நள்ளிரவு 11:55 மணி அளவில் புதுச்சேரி கடற்கரை நோக்கிச் சென்றுள்ளது. அதேபோல் காந்தி வீதி இருந்து முத்தியால்பேட்டை நோக்கி ஒரு கார் சென்றுள்ளது. அப்போது இரண்டு கார்களும் நேரு வீதி, காந்தி வீதி சந்திப்பில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் கார்களின் முன்பகுதிகள் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த மூன்று பெண்கள் உள்பட 9 பேர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர். தகவல் அறிந்த பெரிய கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கார்களை அப்புறப்படுத்தி விபத்து குறித்து போக்குவரத்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் விபத்து நடந்தது இரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது எனவும், அதே சமயம் பகல் நேரத்தில் விபத்து நடந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.