ஓசூரில் துவங்கியது மாநில அளவிலான செஸ் போட்டி.. திறமையை வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!
Published : Jan 29, 2024, 5:45 PM IST
கிருஷ்ணகிரி: ஓசூரில் சிப்காட் லைன்ஸ் கிளப் மற்றும் குணம் மருத்துவமனை இணைந்து முதல் முறையாக மாநில அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதில் U9, U11, U15, U17 என 25 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒரு பிரிவாகவும், வெளி நபர்கள் பங்கேற்கும் விதத்தில் மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இந்தப் போட்டிக்கான முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சத்தை பரிசாக வழங்க இருப்பதாகவும், இது போன்ற செஸ் போட்டிகள் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே ஊக்கத்தை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் இதில் பங்கேற்பவர்களுக்கு சாம்பியன் பட்டத்திற்கான கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களுடன் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு ஊக்க பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.