தாளவாடி அருகே தோட்டத்துக் குடியிருப்பை இடித்த ஒற்றைக் கொம்பன் யானை.. கிராம மக்கள் பீதி!
Published : Jan 30, 2024, 2:26 PM IST
ஈரோடு: தாளவாடியை அடுத்த மாவநத்தம் கிராமத்தில் விளை நிலங்களைச் சேதப்படுத்தி, வீட்டை இடித்த ஒற்றைக் கொம்பன் யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் தாளவாடி மலைப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள் அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைந்து விளை நிலங்களைச் சேதப்படுத்துவதும், மனிதர்களைத் தாக்குவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் கொம்பன் யானை, தலமலை வனத்தை ஒட்டியுள்ள மாவநத்தம் கிராமத்தில் புகுந்து அங்குள்ள கணேசன் என்பவரின் தோட்டத்துக் குடியிருப்பு மற்றும் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களைச் சேதப்படுத்தியது. விளைநிலங்களில் யானை சுற்றிய நிலையில், கிராம மக்கள் ஒன்று திரண்டு, டார்ச் ஒளி அடித்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் இருந்த ஒற்றைக் கொம்பன் யானை, அதன் பின் வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதியில் இருந்து மீண்டும் ஒற்றைக் கொம்பன் யானை வரலாம் எனக் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.