திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் வைத்து கடத்தி வரப்பட்ட 683 கிராம் தங்கம் பறிமுதல்!
Published : Feb 21, 2024, 2:56 PM IST
திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து நேற்று(பிப்.20) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வரும் பயணி ஒருவர் சட்ட விரோதமாக நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், விமான நிலையம் முழுவதும் பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் தனது உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பயணியிடமிருந்து 683 கிராம் மதிப்புடைய தங்கத்தை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.42 லட்சத்து 69 ஆயிரம் ஆகும்.
மேலும், எந்த நோக்கத்திற்காகத் தங்கத்தைச் சட்ட விரோதமாக கடத்தி வந்தார்? அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா அல்லது வேறு வழக்குகள் இவர் மீது உள்ளதா? என பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.