பாபநாசம் அணையில் ஓய்வெடுத்த முதலை.. வைரலாகும் வீடியோ!
Published : Mar 1, 2024, 4:47 PM IST
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ளது காரையார் அணை. இந்த அணை தென் மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் நீர்வரத்து அதிகரித்து, உச்ச நீர்மட்டமான 143 அடி கொள்ளளவில் 140 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி 101.15 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 55.30 கன அடியாகவும் உள்ளது. இந்த நிலையில், அணையின் நீர்மட்ட அளவு பார்க்கக்கூடிய பகுதி அருகே, தண்ணீரின் மேற்பரப்பில் முதலை ஒன்று ஓய்வெடுத்தது. இதனை அவ்வழியாகச் சென்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
காரையார் அணையில் ஏற்கனவே முதலை இருப்பதால், இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுவாகவே அணையின் நீர்மட்டம் குறையும்போது, அவ்வப்போது முதலைகள் கரைப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதலை வெளியே தெரியும்படி ஓய்வெடுத்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.