தஞ்சாவூர் தூய அற்புத அன்னை ஆலயத்தின் தேர்பவனி கோலாகலம்! - Thuya Arputha annai aalayam
Published : May 5, 2024, 3:29 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தூய அற்புத அன்னை ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர்பவனி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த மேல திருப்பந்துருத்தியில் பிரசித்தி பெற்ற தூய அற்புத அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தூய அற்புத அன்னை ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு, தினமும் காலை, மாலை சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இந்நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருபவனி இன்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, அருட்தந்தை வின்சென்ட், தேருக்கு புனித நீர் தெளித்து, ஜபம் செய்து தொடங்கி வைத்தார்.
இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ‘மரியே வாழ்க’ என பக்தி கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.