காரையாறு சாலையில் ஹாயாக நடந்து சென்ற சிறுத்தை.. வைரலாகும் வீடியோ! - leopard roaming in Tirunelveli
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : May 24, 2024, 5:23 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/24-05-2024/640-480-21549022-thumbnail-16x9-tvl.jpg)
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாபநாசம் அடிவாரப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. மக்கள் நடமாடும் பகுதிக்குள் சுற்றி வரும் அந்த சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர் வனப்பகுதியில் விட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 சிறுத்தைகள் வனத்துறையினர் கூண்டில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று இரவு பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்லும் மலைப் பாதையில் சாலையோரத்தில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் சிறுத்தை சிறிது தூரம் சாலையோரமாக நடந்து சென்று, அடர்வனப் பகுதிக்குள் செல்வது பதிவாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.