“போதை இல்லா வாழ்க்கை ஜோரு.. போதை இல்லா தமிழகம் கூறு” - பெண் காவலரின் விழிப்புணர்வு வீடியோ வைரல்!
Published : Feb 17, 2024, 10:25 AM IST
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை உதவியுடன் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட முத்தாபுதுபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலைக் காவலர் சசிகலா, போதை இல்லா தமிழகம் எனும் முதல்வரின் திட்டத்தை முன்வைத்து, போதை ஒழிப்பு குறித்து, “பள்ளிக்கூட பறவைகள் எல்லாம் கஞ்சாவை நஞ்சாக எண்ணுங்கள்” என்று விழிப்புணர்வூட்டும் வகையில் பாடல் ஒன்றினை பாடி வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த பாடல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. “போதை இல்லா வாழ்க்கை ஜோரு, போதை இல்லா தமிழகம் கூறு” என்று இளைய சமுதாயம் மீது அக்கறை கொண்டு பாடிய பாடல், அனைவரது மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.