புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலை பேரூராட்சியில், 87 லட்சம் ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை, அமைச்சர்கள் கே என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,"தமிழ்நாடு முதலமைச்சரின் 33 மாத கால ஆட்சியில் 10 நகராட்சிகளை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 490 பேரூராட்சிகளில் தலா 11 கோடி ரூபாய் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.புதுக்கோட்டைக்குக் குடிநீர் வழங்க 1,480 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் திட்டத்தைத் தொடங்கி வைப்பார் என தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கேஎன்.நேரு கூறுகையில்,"சென்னையைப் பொறுத்தவரைக் குடிதண்ணீருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
கடந்த ஆண்டு இதே நேரம் 10 டிஎம்சி தண்ணீர் இருந்தது. இந்தாண்டு தற்பொழுது 8.5 டிஎம்சி தண்ணீர் உள்ளது. முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய அனைத்து ஏற்பாடு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது,பென்னாகரத்தில் 2000 முதல் 3000 கன அடி மழை பெய்து வந்து கொண்டு இருக்கிறது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தால் நன்றாக இருக்கும். தற்போது கையிருப்பு உள்ள தண்ணீர், போதுமான அளவிற்கு உள்ளது. மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பகுதிக்குப் பாதாளச் சாக்கடை திட்டம், சாலைகள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் வரும்.
அதேபோல் வீடு கட்டும் திட்டம், கழிவறை வசதி, வடிகால் வசதி, போன்ற திட்டங்களும் வரும். ஒரு நகரத்தில் என்னென்ன திட்டங்கள் உள்ளதோ அனைத்து திட்டங்களும் மாநகராட்சிக்கும் வரும் என்றார். தொடந்து பேசிய அவர், எந்த மாநகராட்சிக்கும் அதிகமான வரி வசூலிக்கப்படுவதில்லை.
அனைத்து இடங்களுக்கும் சீரான வரி தான் போட்டுள்ளோம். ஒரு இடத்தில் அதிகமாகவும் மற்றொரு இடத்தில் குறைவாகவும் வரி விதிக்கப்படுவதில்லை. சௌரியங்கள் அதிகரிக்கும் போது சில காசுகள் அதிகரிக்கத் தான் செய்யும்.
தமிழ்நாட்டிற்குப் பிரதமர் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் வெள்ள காலங்களில் தமிழ்நாட்டை அவர் பார்க்க வரவில்லை, கேட்ட நிதியையும் அவர் தரவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் வெள்ள பாதிப்பைப் பார்க்கச் சென்றார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சிஏஏ சட்டம் வேண்டாம்' கோவையில் இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!