ETV Bharat / state

'சிஏஏ சட்டம் வேண்டாம்' கோவையில் இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 9:19 AM IST

Protest Against CAA: கோவையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் தலைமையில் இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்

Muslims protest against CAA in coimbatore
Muslims protest against CAA in coimbatore

சிஏஏ சட்டத்திற்கு எதிராக கோவையில் இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கடந்த பிப்.11ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act, 2019 - CAA) நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, மார்ச் 11ஆம் தேதி சிஏஏ சட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல் தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதோடு, இச்சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் எனவும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி கோவை மத்திய மாவட்ட எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் சார்பாக உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக "மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. அதில், பாஜகவுக்கு எதிராகவும், தேர்தல் பத்திர விவகாரத்தை மறைக்கவே இந்த சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், சிஏஏவை ரத்து செய்ய வேண்டும் எனவும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவில், "வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், பாரசீகர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகிய அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தில் பல்லாண்டு காலமாக வாழும் இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் குறித்து தகவல்கள் ஏதும் இடம்பெறாமல் இருந்தது நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2019 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, கரோனா வந்த காரணத்தால் சிஏஏ தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

ஆகையால் கடந்த 4 ஆண்டுகளாகப் போராட்டம் கைவிடப்பட்டிருந்தது. தற்போது சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் கோவையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல் இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் மக்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக மசோதா சரத்தில் தெரிவிக்கப்படாததால், தமிழக அரசு தரப்பில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வருவது குறிப்பிடத்தக்கது.

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ரஹிம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மாவட்ட தலைவர் முஸ்தபா, பொதுச் செயலாளர் அப்துல் காதர் உள்ளிட்ட பெண்கள் குழந்தைகள் அக்கட்சியின் செயல்வீரர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயக முற்போக்கு சிந்தனைவாதிகள் என அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் திறக்க மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.