ETV Bharat / state

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் சென்னை வருகை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 11:58 AM IST

Fishermen Arrival at Tamil Nadu
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

TN Fishermen arrival at Chennai Airport: இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, விமானங்கள் மூலம் சென்னை நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அரசு வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை: கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் 2 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 18 பேரையும் மடக்கிப் பிடித்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மீனவர்களின் படகுகள், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 18 பேரையும் இலங்கைக்கு அழைத்துச் சென்று, பின்னர் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதினார்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், இலங்கை நீதிமன்றம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ராமநாதபுரம் மீனவர்கள் 18 பேரையும் விடுதலை செய்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர், இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை நடத்தினர். அதோடு, மீனவர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட்கள் இல்லாததால் அனைவருக்கும் எமர்ஜென்சி சான்றிதழ்களை இந்திய தூதரகம் வழங்கியது. அதோடு மீனவர்களை விமானத்தில் சென்னை அனுப்புவதற்கு விமான டிக்கெட்களையும் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்குப் புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 18 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்னர், தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், மீனவர்கள் அவர்களுடைய சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, கடந்த ஜனவரி 13ஆம் தேதி இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 28 மீனவர்கள், 2 விமானங்களில் சென்னைக்குத் திரும்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாநிலங்களவையில் சோனியா.. மக்களவையில் பிரியங்கா.. காங்கிரஸின் கணக்கு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.