தமிழ்நாடு

tamil nadu

"மீண்டும் செங்கல்லை தூக்கும் நேரம் வந்துவிட்டது"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By

Published : Feb 7, 2023, 7:59 AM IST

Updated : Feb 7, 2023, 8:04 AM IST

2023-24 மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு வாயில் வடை சுடுகிறது என்றும், 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது அதே செங்கல்லை மீண்டும் தூக்க வேண்டிய நிலை வரும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

"மீண்டும் செங்கல்லை தூக்கும் நேரம் வந்துவிட்டது"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை:மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கும் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (பிப்.6) துவக்கி வைத்தார். பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் உள்ள திடலில் நடந்த இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, சுய உதவி குழுவினரின் அங்காடிகளை பார்வையிட்டு, பயனானிகள் நடுவே நடந்து சென்று அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார்.

சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒற்றை சிலம்பு மாதிரி, ஒற்றை செங்கல்:இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இவ்வளவு பெரிய தாய்மார்கள் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியுடன் எங்குமே பார்த்தது இல்லை. கண்ணகி ஒற்றை சிலம்பை வைத்து நீதி கேட்டது மாதிரி, ஒற்றை செங்கல்லை வைத்து நான் நீதி கேட்க காரணமாக இருந்தது இந்த மண் தான். தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்ற அந்த ஒற்றை செங்கல் மதுரையில் எடுத்ததுதான். திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் மதுரையின் வாழ்வாதாரம் உயர்ந்து கொண்டே போகிறது.

சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

75% தேர்தல் வாக்குறுதிகள்:தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 75% வாக்குறுதிகள் நிறைவு பெற்றுள்ளன. செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்காதது தான் எங்கள் பிரச்சனை. அதற்கு முன்பாகவே, எதிர்கட்சிகள் அதைப்பற்றிய தவறான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகின்றனர். ஆனால், கடந்த அதிமுக ஆட்சி பல லட்சம் கோடி கடனையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் தான் விட்டுச்சென்றது.

திமுக ஆட்சி அமைந்த பின்னர், செயல்படுத்திய பல திட்டங்கள் பெரும் பயன் அளித்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் 'மகளிருக்கான இலவச பேருந்து சேவை' மூலம் 220 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 'புதுமைப்பெண் திட்டம்' மூலம் 1.16 லட்சம் மாணவிகளும், 'மக்களை தேடி மருத்துவம்' மூலம் 1 கோடி மக்களும், காலை உணவு திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் குழந்தைகளும் பயனடைந்து உள்ளனர்.

சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வாழ்வில் எதிர்நீச்சல் போடும் மகளிர் பொருளாதார ரீதியாகவும் எதிர்நீச்சல் போட உதவும் துடுப்புதான் இந்த சுய உதவிக்குழு கடன் உதவி. தமிழ்நாட்டில் இதுவரை 50 லட்சம் சுய உதவி குழுக்கள் பயன்பெற்று வருகின்றன. இன்று மதுரை மாவட்டத்தில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் பயன்பெறுகின்றன.

மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் எல்லோரும் எங்கள் ஹீரோக்கள். தமிழ்நாட்டில் 517 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களாக உள்ளனர் என்பது எங்களுக்கு மிக பெருமையாக உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு அளிக்கும் பணம், வெறும் பணம் அல்ல, அது அரசின் அக்கறையும் அன்பும் ஆகும்.

சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை எய்ம்ஸ்; வாயில் வடை சுடும் அரசு:2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் (AIIMS Madurai) இன்னும் துவங்கவில்லை. ஆனால், 2021-ல் அடிக்கல் நாட்டப்பட்ட கலைஞர் நினைவு நூலக கட்டுமானம் (karunanidhi Memorial Library) நிறைவுற்று திறப்புக்கு தயாராகி விட்டது.

செயல்படும் அரசுக்கும், வாயில் வடை சுடும் அரசுக்கும் இதுதான் வித்தியாசம். இந்த பட்ஜெட்டில் கூட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை. இதனால், 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அதே செங்கல்லை தான் தூக்க வேண்டிய நிலை வரும். மதுரை மக்கள் அத்தனை பேரும் செங்கல்லை கையில் எடுக்கும் முன் நிதி ஒதுக்கி கட்டுமான பணிகளை துவங்குங்கள்.

சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் எல்.ஐ.சி.யில் முதலீடு செய்த பணம் காணாமல் போகிறது. சிலிண்டர் இணைப்புக்கான மானியம் கிடைக்கவில்லை. இதையெல்லாம் கேட்பதற்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் உங்களை சந்திக்க வருவதில்லை. ஆனால், திமுக அரசு மக்களுடனே இருக்கிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு துணை நிற்கும்.உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து உங்களுக்காக உழைப்பேன்" எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மேடையிலேயே 1,500 பயனாளிகளுக்கு கடனுதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்ய தர்ஷினி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:Erode East By election: அதிமுகவில் நடப்பது என்ன?

Last Updated :Feb 7, 2023, 8:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details