தமிழ்நாடு

tamil nadu

தெலங்கானா பதவி ஏற்பின் போது அரங்கை அலறவிட்ட சீதாக்கா? யார் இவர்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 6:22 PM IST

Telangana Congress Minister Seethakka: சீதாக்கா முன்னதாக இந்த பெயர் கரோனா தொற்றின் போது அனைவராலும் பேசப்பட்டது. அதன் பின் தற்போது, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் படி தெலங்கானா பதவி ஏற்பின் போது நடைபெற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. யார் இந்த சீதாக்கா என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

who-is-telangana-congress-minister-seethakka
தெலங்கானா பதவி ஏற்பின் போது அறங்கை அலறவிட்ட சீதாக்கா? யார் இவர்?

ஹைதராபாத் (தெலங்கானா):தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணும் பணியானது டிசம்பர் 03ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் பிஆர்எஸ் கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தற்போது தெலங்கானாவில் ஆட்சி அமைத்துள்ளது. இதன் பதவி ஏற்பு விழா கடந்த 8ம் தேதி நடைபெற்றது. அப்போது பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக சீதாக்கா பெயரை உச்சரிக்கும் போது அரங்கமே மக்கள் முழக்கங்களால் நிரம்பியது. தற்போது இந்த வீடியோ காட்சி தெலங்கானா மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

யார் இந்த சீதாக்கா? 1971ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் முலுகு பகுதியில் பிறந்தார். இவரது பெயர் அனுசுயா தன்சாரி ஆகும். கோயா பழங்குடியின மக்களைச் சேர்ந்தவர். இவர் தனது 8 வகுப்பு படிக்கும் போதிலிருந்து தனது மக்களுக்கான சமூகப் பணியைத் தொடங்கியுள்ளார்.

நக்சலைட் to வழக்கறிஞர்:10ஆம் வகுப்பு படிக்கு போது அனுசுயா தன்சாாி தனது மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் ஆயுதம் ஏந்த வேண்டும் என எண்ணி நக்சலைட்டாகத் தனது பயணத்தைத் தொடங்கினார். அப்போது தான் அவருக்கு சீதாக்கா எனப் பெயரால் கிடைக்கப் பெற்றது. ஆனால் ஆயுதம் ஏந்தி போராடுவது தவறு என அறிந்த சீதாக்கா 1997ஆம் ஆண்டு பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார். மேலும் உடனடியாக சட்டக் கல்லூரியில் இணைந்து தனது படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆனார்.

பலம் அடைய வைத்த தேர்தல் தோல்விகள்:வழக்கறிஞராக மக்களுக்கு உதவுவதை விட அதிகாரம் கையிலிருந்தால் தனது மக்களுக்கான அதிகமான உதவிகளைச் செய்யலாம் என நினைத்து முதன் முறையாக 2004ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்ப்பில் முலுகு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

"சீதாக்கா" முதல் வெற்றி: 2009ஆம் ஆண்டு முலுகு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஆந்திராப் பிரதேசம் இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து 2014ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானாவில் அதே முலுகு தொகுதியில் அப்போதைய ராஷ்டிர சமித கட்சி (தற்போதைய பிஆர்எஸ்) சார்பாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

2018ஆம் ஆண்டு முலுகு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கரோனா தொற்றின் போது மக்கள் சேவை: கரோனா தொற்றின் போது அப்போது ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சியின் உதவி இல்லாமல் நன்கொடையாளர்களின் உதவி உடன் முலுகு தொகுதியிலுள்ள ஒரு லட்சம் பழங்குடியின குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இது தெலங்கானா முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. ஒரு பக்கம் அரசியல் என்றாலும் மறு பக்கம் தனது படிப்பைத் தொடர்ந்து சீதாக்கா முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

அமைச்சரான சீதாக்கா: தற்போது 2023 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முலுகு தொகுதியில் வெற்றி பெற்று பதவி ஏற்பு விழா டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சீதாக்கா என்ற பெயர் கேட்டவுடன் கூட்ட அரங்கே அதிரும் அளவு பொது மக்கள் கோசங்களை எழுப்பினர்.

இந்த காட்சி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பாகுபாலி பதவி ஏற்கும் காட்சி போல் அமைந்ததாகப் பலர் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது தெலங்கானா மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் வைரலாகி உள்ளது. தற்போது, தெலங்கானா மக்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் யார் இந்த சீதாக்கா என்று சமூக வலைத்தளத்தில் தேடும் அளவு அவரது பதவி ஏற்பு நிகழ்வு அமைந்துள்ளது.

இதையும் படிங்க:முதல் முறையாக சூரியனின் முழு வட்ட படத்தை படம் பிடித்து இஸ்ரோ சாதனை!

ABOUT THE AUTHOR

...view details