வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் என்னும் ஒரு மாத கால நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) முறைப்படி தொடங்கி வைத்தார். அதோடு 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ‘திருக்குறள்’ புத்தகத்தை வெளியிட்டார். அப்போது பிரதமர் உரையாற்றுகையில், இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் ஒவ்வொரு சங்கமமும் போற்றப்படுகிறது. காசி-தமிழ் சங்கமம் இந்தியாவின் வலிமை மற்றும் குணாதிசயங்களின் கொண்டாட்டமாகும்.
ஒருபுறம் காசி இந்தியாவின் கலாச்சாரத்தில் தலைநகரமாகவும், மறுப்புறம் தமிழ்நாடு இந்தியாவின் தொன்மை மற்றும் பெருமையின் மையமாகவும் உள்ளது. கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தைப்போலவே காசி-தமிழ் சங்கமம் நடக்கும் இடமும் மிகவும் புனிதமானது. காசியும் தமிழ்நாடும் காலத்தால் அழியாத நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்களாக உள்ளன.
சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் மிகவும் பழமையானது மட்டுமல்லாமல் உயிர்ப்புடனும் திகழுக்கூடிய மொழிகளாகும். காசியில் பாபா விஸ்வநாதர் இருக்கிறார். தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இறைவனின் அருள் உள்ளது. காசி, தமிழ்நாடு இரண்டுமே சிவனின் அருளைப் பெற்றுள்ளன. இசையோ, இலக்கியமோ, கலையோ எதுவாக இருந்தாலும், காசியும், தமிழ்நாடும் எப்போதும் ஆதாரமாக விளங்குகின்றன. காசியின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் பிறந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்தாலும் காசியில் வாழ்ந்த வேத பண்டிதர் ராஜேஷ்வர் சாஸ்திரியும், காசியில் உள்ள அனுமான் படித்துறையில் வாழ்ந்த பட்டாபிராம சாஸ்திரியும் காசியில் ஆன்மிகத்தை வளர்த்தனர். அரிச்சந்திரா படித்துறை கரையில் உள்ள தமிழர் கோயிலான காசி காசி காமகோடீஸ்வரர் கோயில் மற்றும் கேதார் படித்துறை கரையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழமையான குமாரசாமி மடம் மற்றும் மார்கண்டேய ஆசிரமம் ஆகியவற்றை கரையோரங்களில் வசித்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் பராமரித்துவந்தனர். பல ஆண்டுகளாக காசியில் வாழ்ந்த மாபெரும் கவிஞரும் புரட்சியாளருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணிய பாரதியையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அருணாச்சல்: பசுமை விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி