தமிழ்நாடு

tamil nadu

"ராஜராஜ சோழனுக்குப் பிறகு திமுக ஆட்சியில்தான் கோயில் திருப்பணிகள் அதிகம் நடைபெறுகிறது" - அமைச்சர் சேகர்பாபு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 9:01 PM IST

Minister Sekar Babu: தமிழகத்தில் இதுவரை மொத்தம் ஆயிரத்து 339 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளதாகவும், ராஜராஜ சோழனுக்குப் பிறகு திமுக ஆட்சியில்தான் சிதிலமடைந்த திருக்கோயில்களின் திருப்பணிகள் அதிகம் நடைபெறுகிறது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Minister Sekar Babu
அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

கரூர்: ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலினை, ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணியினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (பிப்.2) தொடங்கி வைத்தார். பின்னர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்து சமய அறநிலையத்துறை புதுப்பொலிவுடன் வீறுநடை போடுகிறது என்றால், முதலமைச்சரின் உத்தரவுகளும், உற்சாகமும்தான் முக்கிய காரணமாகும். அந்த வகையில், நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷமான திருக்கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத காரணத்திற்காக, முதலமைச்சர் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் தலா 100 கோடி ரூபாய் வீதம் 200 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கினார்.

இந்நிதியுடன் உபயதாரர்களின் பங்களிப்பையும் சேர்த்து 197 திருக்கோயில்களில், 304.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 12 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளது. 13 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குக்கள் இந்த ஆண்டில் நடைபெறும்.

வரலாற்றில் ராஜராஜ சோழன் காலத்தில்தான், திருக்கோயில்களின் பணிகள் உயர்வு பெற்றது என்று சொல்வார்கள். அதேபோல், ராஜராஜ சோழனுக்குப் பிறகு இந்த ஆட்சியில்தான் சிதிலமடைந்த திருக்கோயில்களின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யும் ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

கரூர் திருமுக்கூடலூர் அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஒட்டுமொத்தமாக ரூபாய் 5 கோடி மதிப்பில் மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் புனரமைத்தல், அம்பாள் சன்னதி புனரமைத்தல் பணிகளும், யாகசாலை, சுப்பிரமணிய சன்னதி மீள கட்டுதல் பணி போன்ற 11 பணிகள் இன்று (பிப்.2) மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திருக்கோயிலுக்கு எப்போது குடமுழுக்கு நடைபெற்றது என்ற குறிப்பு இல்லாமல் இருக்கிறது.

ஆனால், இந்தக் கோயிலில் உள்ள மணி முத்தீஸ்வரர் சன்னதிக்கு 2002ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்ததற்கான கல்வெட்டு உள்ள நிலையில், மூலவரான அகஸ்தீஸ்வரருக்கு எப்போது குடமுழுக்கு நடந்தது என்ற குறிப்புகள் இல்லை. இது போன்ற குடமுழுக்குகளில் நடைபெறாத திருக்கோயில்களை ஒவ்வொன்றாக கணக்கில் எடுத்து, புனரமைக்கப்பட்டு வருகிறது. இன்று துவங்கப்பட்டுள்ள 5 கோடி மதிப்பிலான திருப்பணிகளை விரைவாக முடித்தால், வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குடமுழுக்கு நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

400 ஆண்டுகள் பழமையான திருவெற்றாரில் உள்ள ஆதி கேசவ பெருமாளுக்கு கூட இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. நேற்றைக்கு கூட, சென்னை மகாபலிபுரத்தில் தலசயன பெருமாள் கோயில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்சியில்தான் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது.

இது போன்ற ஆண்டுக் கணக்கில் குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களுக்கு எல்லாம் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் ஆயிரத்து 339 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இதில் நேற்று (பிப்.1) மட்டும், 13 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்). இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் குமரதுரை, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணைமேயர் சரவணன், கோயில் உதவி ஆணையர் நந்தகுமார், தக்கார் ஜெயதேவி, மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் பால்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:இலங்கை கடற்படையால் 6,000 தமிழ் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் - நாடாளுமன்றம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details