நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி, தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு தொட்டபெட்டா, மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளது. இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி முதல் "FAST TAG" பணிகள் நடைபெற்று வந்ததன் காரணமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் மே 22ஆம் தேதி வரை மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். தற்போது 50% பணிகள் நிறைவடைந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் இன்று (மே 23) முதல் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்குச் செல்லலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூங்காக்களில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சிகளை கண்டு ரசித்துவிட்டு, தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து இன்று முதல் தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட என அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது.