தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் 500 ஆண்டுகால பாரம்பரிய பாகவத மேளா நாட்டிய நாடகக் கலைவிழா பிரகலாத சரித்திரம் எனும் நாட்டிய நாடகத்துடன் துவங்கியது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவத மேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மெலட்டூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலய வளாகத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவில் ஹரிசந்திரா, ருக்மிணி திருக்கல்யாணம், போன்ற நாட்டிய நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் இரவு துவங்கும் பாகவத மேளா நாடகங்கள் அதிகாலை வரை நடைபெறும். இந்த நாடகங்களில் ஆண்களே பெண்கள் வேடம் தரித்து விரதமிருந்து நடிப்பார்கள்.
மேலும், இந்த நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் நிறுவனம், என பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளாக இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்துவரும் மெலட்டூர் உள்ளூர் வாசிகள்.
இதுமட்டும் அல்லாது, குடும்பம் வழிவழியாக தந்தை, மகன் என தொடர்ந்து நடித்து இந்த நாடகங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கின்றனர். இந்த நாடகங்கள் வித்தியாசமாக பண்டைய காலங்களில் நாடகம் நடத்தப்பட்டது போல் எண்ணெய் விளக்கு ஒளியில் நடைபெறுகிறது.
தெய்வீகம், செவ்வியல் இசை, நாட்டிய மரபுகள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடகத்தை ஏராளமான நாட்டிய ரசிகர்கள் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: ஏற்காடு 47வது கோடை விழா மலர் கண்காட்சி.. கண்ணைக் கவரும் மலர் மாடலின் கிளிக்ஸ்!