'திமுகவினர் பணப்பட்டுவாடா; தட்டிக்கேட்டால் மிரட்டப்படும் பாஜகவினர்!'
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவையில் பல்வேறு இடங்களில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் (திமுக) வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துவருகிறார்கள். இதனைக் கேட்டால் பாஜகவினரை மிரட்டுகிறார்கள். இது குறித்து புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. தேர்தல் ஆணையம் உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் (திமுக) அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத திமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விதிகளை மீறிச் செயல்படுகிறது. சிறுவாணி அணை முழு கொள்ளவை எட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மக்களின் தேவைகளின் மீது கவனம் செலுத்தாமல் கடைசி நேரத்தில் அதிகார பலத்தால் வாக்காளர்களை மிரட்டி வெற்றி பெற முடியும் என திமுகவினர் எண்ணுகின்றனர்" எனத் தெரிவித்தார்.