உலக கோப்பை இந்தியா வெல்ல வேண்டுதல்! "அல் தி பெஸ்ட்" முழக்கத்துடன் உடைந்த 1,008 தேங்காய்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 7:12 PM IST

thumbnail

மதுரை: 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (நவ. 19) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், இந்திய அணி வெற்றி பெற்று, உலக கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து வடக்குமாசி வீதி - மேல‌மாசி‌ வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோயிலில் விசேஷ பூஜை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் உலக கோப்பை படம் கொண்ட பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், முகமது ஷமி, ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சூரியக்குமார் யாதவ் உள்ளிட்ட அனைத்து வீரர்களின் பெயர்களை தனித்தனியாக சொல்லி சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 'ஆல் தி பெஸ்ட்' இந்தியா என்ற கோஷம்‌ முழங்க 1008 தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் மற்றும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர், நெல்லை பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த‌பாண்டி, அத்வி மீடியா ஆதவன், விநாயகா இம்பெக்ஸ் மகேந்திரன், சுப்பிரமணியன், ஆர்.குமார், திருநகர் ரோட்டரி சீனிவாசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.