வேளாங்கண்ணியில் தேர் பவனி திருவிழா -பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 10:51 AM IST

thumbnail

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று(செப். 8) இரவு நடைபெறுவதை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் "புனித லூர்து நகரம்" என்று அழைக்கப்படும் பெருமைக்குரியது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழாவின் முக்கிய பெருவிழாவான அன்னையின் பிறந்தநாள், நடைபெறுவதை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட். 8) இரவு பெரிய சப்பர பவனி எனப்படும், பெரியதேர்த் திருவிழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொல்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

இதனால் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், மற்றும் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு மற்றும் சிறிய சப்பர பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பெரியதேர்த்திருவிழா நடைபெறுவதையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

மேலும் நாளை (செப்டம்பர் 9ஆம் தேதி) மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு  நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து நாளை காலை 6 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.  அதனை தொடர்ந்து மாலை, கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவடைகிறது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.