டீ மாஸ்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. திருப்பத்தூரில் நடந்தது என்ன? வெளியான சிசிடிவி காட்சிகள்! - Tirupathur Tea shop theft

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 6:40 PM IST

thumbnail
திருட்டு நடந்த டீக்கடையின் cctv காட்சிகள் (credits- ETV Bharath Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியைச் சேர்ந்த மதன் என்பவருக்குச் சொந்தமாக டீக்கடை ஒன்று உள்ளது. இங்கு டீ மாஸ்டராக அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா (34) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று அதிகாலை டீ கடையைத் திறக்க வந்த ராஜா, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் மஞ்சப்பையில் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 

பின்னர், இது குறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் நகர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் கடை திறக்க சிறிது நேரத்துக்கு முன்பாக ஒருவர் கடையில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றதும், மற்றொருவர் கடையின் வெளியே காவலுக்கு நின்றதும் தெரிய வந்துள்ளது.

அதனை ஆதாரமாகக் கொண்டு போலீசார் தீவிரமாக அவர்களைத் தேடி வந்தனர். அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், ஒருவர் கோட்டை தெருவைச் சேர்ந்த கலில் (30), மற்றொருவர் முத்துசாமி தெருவைச் சார்ந்த பிரபாகரன் (39) என்பதும் தெரிய வந்துளது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 12,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.