ஒசூரில் கடலைக்காய் திருவிழா.. ஆஞ்சநேயர் மீது கடலைக்காயை எறிந்து பக்தர்கள் நூதன வழிபாடு!
Published : Jan 1, 2024, 5:08 PM IST
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புத்தாண்டையொட்டி நாடு நலம்பெற வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமி மீது கடலைக்காயை எறிந்து நூதன வழிபாட்டை மேற்கொண்டனர்.
ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (ஜன.01) 66ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று இந்த கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைபோல் இன்று (ஜன.01) நடைபெற்ற விழாவில் ஆஞ்சநேயருக்குக் காலை முதலே சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் கடலைக்காய்க்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் பிரகாரத்தின் மீதும் ஆஞ்சநேயர் சுவாமி மீதும் எறிந்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு பிறக்கும் போது ஆஞ்சநேயரின் மனம் குளிரும் வகையில் கடலைக்காயை அவர் மீது எறிந்து வழிபட்டால் நாடு நலம்பெறும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை, இந்த திருவிழா அப்பகுதியில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.