ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் கின்னஸ் சாதனை செய்து அசத்தல்!
கோயம்புத்தூர்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் யோகாவில் கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரூபிகா. இவரது குழந்தைகள் பவ்ய ஸ்ரீ, பூவேஷ், சர்வஜித் நாராயணன். ரூபிகா குடும்ப சூழ்நிலை காரணமாக கணவரிடம் விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் ரூபிகாவுடன் வசித்து வருகின்றனர்.
ரூபிகா தனது குழந்தைகளை யோகாவில் சேர்த்து அதனை பழக்கி அதில் திறம்பட செயலாற்றி அவர்களை கின்னஸ் சாதனையாளராக மாற்றியுள்ளார். ஒன்பதாவது வகுப்பு படித்து வரும் பவ்ய ஸ்ரீ தனது குழந்தை பருவம் முதலே யோகா கற்று, யோகா கலையில் எட்டு கோண வடிவில் தொடர்ந்து 2 நிமிடம் 6 வினாடிகளில் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவரை தொடர்ந்து இவரது சகோதர்களான ஒன்பது வயதான பூவேஷ் மற்றும் சர்வஜித் நாராயணன் ஆகியோரும் யோகாவில் தொடர்ந்து பல சாதனைகளை செய்து அசத்தியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் விருதுகளை வாங்கி வீடு முழுவதும் கோப்பைகள், விருதுகள், சான்றிதழ்கள் என குவித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பல்வேறு சாதனைகளுக்காக மூன்று பேருக்கும் அண்மையில் மதுரை முத்தமிழ் சங்கத்தின் இளம் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.