Manipur violence:பொள்ளாச்சியில் பிரதமர் மோடிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
கோயம்புத்தூர்: பிரதமர் மோடிக்கு எதிராக பொள்ளாச்சி நகர திமுகவினர் ஒட்டிய சுவரொட்டி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பல போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தவண்ணம் உள்ளன. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைத்து தலைவர்களும் மணிப்பூர் கலவரத்துக்கு மத்தியில் ஆளும் பாஜகவை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி நகரம் சார்பில், நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டி அப்பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அந்த போஸ்டரில் “வெட்கம் வெட்கம், மக்களே சிந்திப்பீர் சிந்திப்பீர்’ எனவும், ’ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த மன்னன் படமும்; இன்று மணிப்பூரில் கலவரம் பற்றி எரியும் சூழ்நிலையில் பிரதமர் மோடி கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டு கிட்டார் வாசிப்பது போலான படமும்’ உள்ள சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்கள் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் பொள்ளாச்சி முழுவதும் இந்த போஸ்டர் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதோடு நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் பொள்ளாச்சி ஏஎஸ்பி பிருந்தாவிடம் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.