இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச்சில் களைகட்டிய பிளாக் டிக்கெட் விற்பனை - வைரலாகும் வீடியோ!
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் தொடரின் வெற்றியை முடிவு செய்யும் மூன்றாவது போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதற்கான டிக்கெட் விற்பனை முதலில் ஆன்லைன் மூலமாகவும் அதன் பிறகு நேரடியாகவும் நடைபெற்றன. இந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை காண மைதானத்திற்கு முன்பு திரண்டனர். அப்போது அவர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் மைதானத்திற்கு வெளியே காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அதிக விலைக்கு பிளாக்கில் டிக்கெட்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
மைதானம் அருகே 2,500 மற்றும் 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரசிகர்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.