வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு: அதிரடியாக மீட்ட பொதுமக்கள்!

By

Published : Aug 8, 2023, 11:43 AM IST

thumbnail

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே பா.விராலிப்பட்டி கிராமத்தில் அரசு இருபாலர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக விராலிப்பட்டி தெப்பத்துப்பட்டி சாலையில் 3 ஏக்கர் நிலம் பொதுமக்களால் வாங்கி தரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அந்த இடத்தில் வேறொரு நபர் தனது பூர்வீக இடம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார்.  

இந்நிலையில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம் என ஆய்வு செய்யப்பட்டு கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து திட்டப் பணிகள் தொடங்குவதற்கு நிலத்தை சீர் செய்யும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டது. 

அதே வேளையில் இட ஆக்கிரமிப்பாளர்கள் ஜேசிபி இயந்திரத்தை அந்த இடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். பின்னர் பெண் ஒருவர், ஜேசிபி இயந்திரத்தின் சக்கரத்துக்கு அடியில் படுத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனிடையே அங்கு திரண்ட ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நிலத்துக்குள் சென்று அரசு நிலத்தை அதிரடியாக மீட்டனர். பணியை தடுத்தவர்கள் வெளியேற்றப்பட்டு நிலம் சீர் செய்யும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.