முதலாளியின் வீட்டு விழாவிற்கு சீர்வரிசையுடன் வந்து அசத்திய வட மாநிலத்தவர்கள்
சென்னை: பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜாமணி-பத்மாவதி தம்பதி. இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா பூந்தமல்லி அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 11) நடைபெற்றது. ராஜாமணி கட்டுமான நிறுவன உரிமையாளராவார். இவர் தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை உறவினர் போல் எண்ணி விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் சகோதரத்துவ எண்ணத்துடன் கையில் சீர்வரிசையுடன் வந்து அசத்தினர். இந்த சம்பவம் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் போல் பெண்ணிற்கு நலங்கு வைத்து, மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர்.
அதேபோல் விழாவிற்கு வந்திருந்த வட மாநில தொழிலாளர்களும் முக்கியத்துவத்துடன் உணவு வழங்கி அன்பை பரிமாறினர். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்த நிலையில், தன்னிடம் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களை குடும்ப உறுப்பினராக நினைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.