பறவைகளுக்காக விவசாயம் செய்யும் பெத்தநாயக்கனூர் அரசுப்பள்ளி மாணவர்கள்!

By

Published : Mar 3, 2023, 5:25 PM IST

thumbnail

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 165 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் 110 நாட்டு மரங்களை நட்டு, அதனை மாணவர்கள் பராமரித்து வருகின்றனர். 

மேலும் கிராமப்புறங்களில் நாட்டு மரங்கள் அழியாமல் இருக்க, விதைப் பந்துகளை தூவி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், பறவைகளுக்கு சிறுதானியங்களை விவசாயம் செய்து அசத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள் கூறுகையில், ''எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு, பள்ளி வளாகத்தில் சிறுதானியம் விவசாயம் செய்ய ஒதுக்கினர். 

அங்கு பறவைகளுக்காக ராகி, கம்பு, சோளம் உள்பட சிறுதானியங்களை நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் மதிய உணவு எடுத்துக்கொள்ளும்போது, கீழே விழும் உணவுகளை பறவைகள் தினமும் வந்து சாப்பிட்டுச் செல்கிறது. கடந்த கோடைகாலத்தில் பள்ளி வளாகங்களில் சிறுதானியங்களை பறவைகள் சாப்பிட ஏதுவாக வைத்துவிடுவோம். 

ஆனால், தற்போது எங்களது பள்ளி வளாகத்தில் சிறுதானியங்களை விவசாயமே செய்து வருகிறோம். கிராமப்புறங்களில் செல்போன் டவர் அதிக அளவில் உள்ளதால், பறவை இனங்கள் காணாமல் போய்விட்டது. ஆகையால், பறவைகளை பாதுகாக்கவும், உலகிலேயே விவசாயம் தான் பிரதான தொழில் எனவும், திருவள்ளுவர் குறளையும் பாரதியார் கவிதைகளையும் பின்பற்றி விவசாயம் செய்து வருகிறோம். 

வரும் தலைமுறைகள் பறவைகளை காக்க சிறுதானிய விவசாயம் செய்து பறவைகளைப் பாதுகாக்க வேண்டும்'' எனத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு பொதுமக்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.