சுருளி அருவியில் தடையை நீக்கிய வனத்துறை- சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
தேனி: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி போடப்பட்ட தடையினை ஆறு நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் நீக்கி,அருவியில் குளிக்க அனுமதி அளித்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சுருளி அருவியானது தேனி மாவட்டம் கம்பம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள இரவங்கலாறு, வென்னியாறு உள்ளிட்ட மேகமலை வனப்பகுதிகளில் பெய்த கோடை மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆண்டுதோறும் இந்த அருவிக்கு நீர்வரத்து அதிகம் இருப்பதால் தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுருளி அருவிப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட துவங்கியது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கம்பம் கிழக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
தற்போது அருவிப் பகுதியில் யானைகள் நடமாட்டம் குறைந்ததால் இன்று (ஆகஸ்ட் 8ஆம் தேதி) முதல் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுவதாக கம்பம் கிழக்கு வனத்துறையினர் அறிவித்து உள்ளனர். குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக அருவியில் குளித்துவிட்டு செல்கின்றனர்.
இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது