அதிமுக 52 வது ஆண்டு தொடக்க விழா: எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் இடையே சலசலப்பு..
Published : Oct 17, 2023, 9:07 PM IST
தஞ்சாவூர்: அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கும்பகோணத்தில், அதிமுக இபிஎஸ் தரப்பை சார்ந்த முன்னாள் எம்எல்ஏவும், மாநகர செயலாளருமான ராம ராமநாதன் தலைமையில், தஞ்சை சாலை கும்பேஸ்வரன் வடம் போக்கித் தெரு சந்திப்பில் உள்ள எம்.ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக காலை 9.30 மணிக்கு காவல் துறை அனுமதி வழங்கி இருந்தனர். அவர்கள் வந்து சென்ற பின்னர் ஓபிஎஸ் அணியினர் மரியாதை செலுத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இபிஎஸ் அணியை சார்ந்த தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான பாரதி மோகன் நிகழ்விற்கு வரத் தாமதமானதால் அதிமுக மாநகர செயலாளர் ராம ராமநாதன் தலைமையினர், முற்பகல் 11 மணி வரை எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் காத்திருந்தனர்.
இதனால் இவர்களுக்கு அடுத்து அதே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய நீண்ட நேரம் காத்திருந்த, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த, முன்னாள் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் யூனியன் வீரமணி தலைமையிலான குழுவினர் ஆத்திரமடைந்தனர்.
இதனால், கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசன் உள்ளிட்ட காவல்துறையினரிடம், ஓபிஎஸ் தனப்பினர் தங்களை மரியாதை செய்ய அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
அதற்குள் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதி மோகன் சம்பவயிடத்திற்கு வந்துள்ளார். பின்னர் அவரை வரவேற்கும் விதமாக சரவெடிகள் வெடித்து, அவருடன் இணைந்து மாநகர செயலாளர் ராம ராமநாதன், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனையடுத்து, ஒரு சில நிமிட இடைவெளிக்கு பிறகு, ஓபிஎஸ் அணியினரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.