அண்ணாமலை பிரசாரத்தில் சலசலப்பு.. ஆப்பிளை பறிப்பதில் ஆர்வம் காட்டிய தொண்டர்களால் தள்ளுமுள்ளு!
Published : Sep 14, 2023, 12:49 PM IST
திண்டுக்கல்: நிலக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போடப்பட்ட 20 அடி உயர ஆப்பிள் மாலையில் இருந்து ஆப்பிளை பறிப்பதில் அக்கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று (செப்.13) திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியில் நடைபயணத்தை தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக கட்சியின் நிர்வாகி ஒருவர் 20 அடி உயரம் கொண்ட ஆப்பிள் மாலையை கிரேனில் கட்டி தொங்க விட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் பேசி முடித்த அண்ணாமலைக்கு கிரேன் மூலம் ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது.
அதன் பிறகு தொண்டர்கள் மத்தியில் ஆப்பிள் மாலை கொண்டுவரப்பட்டதால் உடனடியாக தொண்டர்கள் அனைவரும் மாலையில் இருந்த ஆப்பிளை பறிக்க தொடங்கினர். இதனால் கட்சி தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கட்சியின் மாநில தலைவரை வழி அனுப்புவதில் கவனம் செலுத்தாமல் ஆப்பிளை பறிப்பதில் அக்கட்சியினர் குறியாக இருந்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.