ETV Bharat / state

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 7:11 AM IST

Updated : Jan 10, 2024, 8:27 AM IST

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்

SS Sivasankar: பொங்கல் பண்டிகையின் போது சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்

விழுப்புரம்: அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 15வது ஊதிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல், வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விமுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், “போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஆணைப்படி, பேருந்துகள் சீராக இயங்கி வருகின்றன. தொழிலாளர்கள் முன்வைத்த ஆறு கோரிக்கைகளில், நான்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.

நிதிநிலை நெருக்கடி காரணமாக சில கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. போராட்டம் நடத்துகிறவர்கள் மீது அதிமுக ஆட்சி போன்று இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுடன் சுமூக பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது. வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும், பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தொடர்ந்து போக்குவரத்து துறை செயல்படும். திமுக ஆட்சியில்தான் தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. யாரும் கேட்காமலே 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது. ஆட்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து துறை தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அவசரப்படுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை" என கூறியுள்ளார். முன்னதாக ஆய்வின்போது அரசு போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குனர் ராஜமோகன், பொது மேலாளர் அர்ஜுனன், முதுநிலை துணை மேலாளர் சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: விழுப்புரம் கோட்டத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும்!

Last Updated :Jan 10, 2024, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.