ETV Bharat / state

Vellore: சரிவர மூடப்படாத பாதாளச் சாக்கடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் - பொதுமக்கள் பெரும் அவதி!

author img

By

Published : Jul 25, 2023, 10:00 PM IST

பாதாள சாக்கடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
பாதாள சாக்கடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

பாதாளச் சாக்கடை அடைப்பை சீரமைக்க திறக்கப்படும் மூடிகள், முறையாக மூடப்படாததால் பல இடங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வேலூர்: பாதாளச் சாக்கடைத் திட்டம் வேலூரில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்னும் நிறைவுபெறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க ஆங்காங்கே இடைவெளி விடப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவறை கழிவுகள், கழிவு நீர் உள்ளிட்டவை மட்டுமே பாதாளச் சாக்கடையில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அண்மைக்காலமாக மாநகரப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முறையான பராமரிப்பின்றி மக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஒரு சில இடங்களில் பராமரிப்புப் பணிக்காக திறக்கப்படும் பாதாள சாக்கடையில் மூடிகள் சரிவர மூடப்படாமல், திறந்த நிலையில் விட்டுவிடுகின்றனர். இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், சத்துவாச்சாரி டபுள்ரோடு உள்ளிட்ட சில இடங்களில் பாதாளச் சாக்கடையின் மூடி, சாலை மட்டத்துக்கு இல்லாமல் ஆங்காங்கே குழிகளாக காணப்படுகின்றன. மழைக்காலங்களில் அந்த குழிகள் மழைநீரில் மூழ்கியிருப்பதால் வாகனம் ஓட்டுவதற்கே அச்சமாக உள்ளதாகவும், குழிகளை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது சாலையில் தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தை விட, அந்த மழைநீரில் மறைந்திருக்கும் பாதாளச் சாக்கடையின் பள்ளம் குறித்துதான் அச்சம் ஏற்படுகிறது. பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக அதைத் திறக்கும் ஊழியர்கள், அதனை முறையாக மூடாமலும், அதைச்சுற்றி சிமென்ட் கலவை பூசாமலும் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் அந்த இடங்களில் பள்ளங்கள் ஏற்படுகின்றன.

தினமும் ஆயிரக்கணக்கானோர் செல்லும் நகரச் சாலைகளில் இந்த பள்ளங்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒரே நாளில் சரிசெய்யக் கூடிய சாதாரண சீரமைப்பைக் கூட செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். பாதாள சாக்கடை மூடியை திறந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும். பள்ளங்கள் உள்ளதா, பாதாளச் சாக்கடையின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: "கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன் போன்றவற்றில் கூட 'இந்தியா' உள்ளது" - எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.