ETV Bharat / state

பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா - பள்ளிக்கல்வித்துறை தகவல்! - tn public exam result 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 3:03 PM IST

TN School Education Department: 2023 – 2024 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக் கல்வி இயக்ககம் வளாகம் புகைப்படம்
பள்ளிக் கல்வி இயக்ககம் வளாகம் புகைப்படம் (Etv Bharat Tamil Nadu)

சென்னை: 2023-2024ஆம் ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டை எட்டி சாதனை படைத்துள்ளனர். மேலும், தமிழ் பாடத்தில் 35 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதேபோல், 2023-2024ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87.90 ஆகும். 1,364 அரசுப் பள்ளிகள் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன.

தமிழ் பாடத்தில் மட்டும் 100 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். இவ்வாறு மொத்தம் 12 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 1,761 பள்ளிகள் இவ்வாண்டு 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இது பள்ளிக்கல்வித் துறையின் வரலாற்றில் ஒர் மைல்கல்லாக கருதப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்களும், சிறப்பான வழி காட்டல்களும்தான் என கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டும் வண்ணம், சென்னையில் ஒரு விழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்விழாவில் தமிழ் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 43 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். இந்த விழாவின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற 5 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த நடவடிக்கை வரும் காலாண்டுகளில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் 100 சதவீதம் இலக்கை எட்ட உத்வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் குவியும் விண்ணப்பங்கள்! -இதுவரை எத்தனை லட்சம் பேர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.