ETV Bharat / state

இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாபை கழற்றச் சொல்லி அத்துமீறல் - 7 பேர் கைது!

author img

By

Published : Mar 30, 2023, 6:14 PM IST

Forced
வேலூர்

வேலூர் கோட்டையில் இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்றச் சொல்லி வற்புறுத்தியதோடு, அவர்கள் அனுமதியின்றி வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவத்தில், 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட எஸ்பி பேட்டி

வேலூர்: வேலூரில் கடந்த 27ஆம் தேதி இஸ்லாமிய இளம்பெண்கள் சிலர் தங்களது ஆண் நண்பர்களுடன் வேலூர் கோட்டையைச் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில நபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, ஹிஜாபை கழற்றிவிட்டு செல்லும்படி கூறியுள்ளனர். அதற்கு இளம்பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அவர்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ நேற்று (மார்ச்.29) சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வேலூர் கோட்டையில் அத்துமீறி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்கள், அதனை பகிர்ந்தவர்கள் என 7 பேரை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சர்ச்சைக்குள்ளான வீடியோவையும் சமூக வலைதளங்களில் இருந்து போலீசார் நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், "பொது இடங்களில் யார் வந்து தனிமனித உரிமைகளின் மீது பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து மிரட்டினாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, இந்த வீடியோவை யாரும் பயன்படுத்தவோ, பரப்பவோ கூடாது. இந்த வீடியோவை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் கோட்டையில் காவல் துறையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள், இப்போது அங்கு ஒரு காவல் உதவி மையமும் திறக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

வீடியோ எடுக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "தற்போது புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, விசாரணை முடிவில்தான் அதைப்பற்றி தெரியவரும்" என்றார்.

மேலும், "தற்போது அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும். கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும். சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்தாலோ அல்லது எவ்வித பிரச்சனை ஏற்படுத்தினாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கண்காணிப்பாளர், உட்கோட்ட துணை கண்காணிப்பாளர், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண் கோட்டையினை சுற்றிலும் ஒட்டப்படும். இப்போதும் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் இல்லாமல்தான் வருகின்றனர், ஒரு சிலர் செய்யும் தவறுதான் அச்சப்படும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது" என்று எஸ்.பி. கூறினார்.

இதையும் படிங்க: வேலூர் சிறார் பாதுகாப்பு இல்லத்தில் 6 பேர் தப்பியோட்டம்.. அச்சத்தில் பாதுகாவலர்கள் கலெக்டர் வீடு முன்பு தஞ்சம்!

இதையும் படிங்க:கர்நாடகாவில் தொடரும் ஹிஜாப் பிரச்சினை: ஹிஜாப் அணிந்து வந்த கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

இதையும் படிங்க: சவால் நிறைந்த பயணம்; உயிரைப் பணயம் வைத்து யானையை இருப்பிடம் கொண்டு சேர்க்கும் லாரி ஓட்டுநரின் கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.