திருச்சி : திருச்சி மாநகராட்சி துணை மேயர் தேர்தல் இன்று (மார்ச் 4) மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மாநகராட்சி துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திவ்யா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்பொழுது, திமுகவினர் ஏராளமானோர் கூட்ட அரங்கில் கூடியிருந்தனர். அவர்கள் முன்னதாக உள்ளே சென்றதால் பத்திரிகையாளர்கள் படமெடுக்கும்போது மிகுந்த சிரமப்பட்டனர். அப்போது திருச்சி மாநகராட்சி துணை மேயர் வேட்பு மனு தாக்கல் செய்வதை படம் எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்களை, மாநகராட்சி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும், திமுகவினர் அதிக அளவில் உள்ளே கூட்டமாக இருந்ததால் புகைப்படக் கலைஞர் ஒருவர் மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டார். புகார் தெரிவித்த பத்திரிக்கையாளரையே ஒருமையில் பேசி அவரை வெளியேறச் சொன்னதால் உடனடியாக பத்திரிகையாளர்களுக்கும், திமுகவினருக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக, கூட்ட நெரிசலில் மாமன்ற கூட்ட அரங்கின் கதவு உடைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க : கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களைக் கைப்பற்றுவதா? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்