ETV Bharat / state

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 9:28 PM IST

பஞ்சப்பூர் பேருந்து முனைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்
பஞ்சப்பூர் பேருந்து முனைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்

Trichy Panjapur Bus Stand: பஞ்சப்பூரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார்.

திருச்சி: திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி (Integrated Bus Terminal), மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் (Multi Utility Facilities Centre) ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி என மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் மொத்த பரப்பளவு 40.60 ஏக்கராகும். இந்த பேருந்து முனையத்தில் புறநகர் பேருந்து நிறுத்த தடங்கள் 124, நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்கள் 142, குறைந்த நேரப் பேருந்து நிறுத்த தடங்கள் 78, நகரப்பேருந்து நிறுத்த தடங்கள் 60 என மொத்தம் 404 பேருந்து நிறுத்த தடங்கள் உள்ளது.

மேலும் இந்த பேருந்து முனையத்தில் 70 கடைகளும், 556 நான்கு சக்கர வாகன நிறுத்தங்களும் அமைய உள்ளது. 1125 இரண்டு சக்கர வாகன நிறுத்தங்களும், 350 ஆட்டோ நிறுத்தங்களும், நகரும் படிக்கட்டுகள் (escalator) வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

இங்குப் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகள் மையம் (Multi utility facilities centre ), கனரக சரக்கு வாகன முனையம் (Truck Terminal), தங்குமிட வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளது. சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ( Roads & Storm Water Drain and other Infrastructure facilities ) சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், ஒருங்கிணைந்த பேருந்து முனையப் பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் வசதி ஆகியவை அமைக்கப்படவுள்ளது.

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையக் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாநகர செயற்பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: சானிடரி நாப்கினில் கடத்தி வரப்பட்ட 612 கிராம் தங்கம் பறிமுதல் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.