ETV Bharat / state

அமைச்சர் கே.என்.நேரு உடன் விஷால் திடீர் சந்திப்பு.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 3:30 PM IST

விஷால் 34 படப்பிடிப்பில் மைச்சர் கே.என்.நேரு படக்குழுவை சந்தித்து வாழ்த்து
விஷால் 34 படப்பிடிப்பில் மைச்சர் கே.என்.நேரு படக்குழுவை சந்தித்து வாழ்த்து

Vishal 34: இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘விஷால் 34’ திரைப்படத்தின் படப்பிடிப்பானது திருச்சியில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற அமைச்சர் கே.என்.நேரு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி: தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பிறகு, ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘விஷால் 34’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படப்பிடிப்பானது திருச்சி - சிதம்பரம் சாலை, லால்குடி அருகே சிறுமருதூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்றுள்ளார்.

இவ்வாறு அவரது சொந்த ஊரான லால்குடி காணக்கிளியநல்லூருக்குச் சென்று கொண்டிருந்த அமைச்சரைக் கண்டதும், படப்பிடிப்புக் குழுவினர் அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்துள்ளனர். இதனைக் கண்ட அமைச்சர் கே.என்.நேரு, தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்த்துள்ளார். பின், படக்குழுவினரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி உள்ளார்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு வந்திருப்பதை அறிந்த நடிகர் விஷால், அங்கு வந்து அமைச்சரை வரவேற்றார். மேலும், அவருடன் இயக்குநர் ஹரி, நடிகர் சமுத்திரகனியும் வரவேற்றனர். பின்னர் அமைச்சருக்கு படக்குழுவினர் சால்வை அணிவித்துள்ளனர். இதனையடுத்து, திரைப்படம் வெற்றி பெற அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளையும் கூறி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் உள்ளிட்டோர், அமைச்சர் நேருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளனர். பின்னர் எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறி விட்டு, அமைச்சர் கே.என்.நேரு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த சந்திப்பின்போது, திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, மேற்கு மாநகர செயலாளருமான மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மொய்தீன் பாய் பொங்கலுக்கு வருகிறார்..! லால்சலாம் டீசருடன் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.