ETV Bharat / state

திருச்சி மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா; அமமுக கவுன்சிலரும் ஆதரவு!

author img

By

Published : Jul 28, 2023, 10:30 PM IST

Etv Bharat திருச்சி மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா
Etv Bharat திருச்சி மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா

திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 98 தீர்மானங்களில் 43ஆவது தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு கூறி மேயரை கண்டித்து இரண்டு திமுக கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலரும் ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி கூட்டம் இன்று (ஜூலை 28) மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், 98 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் அன்பழகன் பேசுகையில், “மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியம் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. அதற்காக எனது சார்பிலும், மாமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

தொடர்ந்து, அனைத்து கவுன்சிலர்களும், தங்களது பகுதிகளில் குடிநீர் பிரச்னை இருப்பதாக குற்றம்சாட்டினர். இது குறித்து கவுன்சிலர் மலர்விழி பேசுகையில், “பி.ஜி.நகர், சிற்பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்” என்று கூறினார். மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பைஸ் அகமது பேசுகையில், “மதிப்பூதியம் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது. இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதற்கு பதில் அளித்து மேயர் பேசுகையில், “தவறான தகவல்களை கூறக்கூடாது. தினம்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மாநகராட்சி திருச்சி மாநகராட்சி மட்டும் தான். 25 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்னை இல்லாத அளவிற்கு அமைச்சர் நேரு திட்டங்களை திருச்சியில் செயல்படுத்தி உள்ளார். எனவே, தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து மண்டல குழு 3-ன் தலைவர் மதிவாணன் பேசுகையில், “திருச்சியில் புதிதாக அமையவுள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். திருச்சி தெப்பக்குளம் கோட்டை நுழைவாயிலுக்கு அன்பில் தர்மலிங்கம் பெயர் சூட்ட வேண்டும்” என்றார். திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசுகையில், “பட்ஜெட்டில் வார்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தீர்கள்? அது எப்போது அமலுக்கு வரும்?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து மேயர் பேசுகையில், “கவுன்சிலர்களுக்கான அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில், “தூய்மைப் பணியாளர்களுக்கு 525 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது; இது கண்டனத்திற்குரியது.

சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபடுபவர்கள் குடித்துவிட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் திருச்சியில் ஒரு கல்லூரிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஏற்புடையது அல்ல” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட இ.கம்யூ சுரேஷ், “தூய்மைப் பணியாளர்கள் குடித்துவிட்டு வருவதாக கூறுவது தவறு” என்றார். தொடர்ந்து, மேயர் அன்பழகன், ”தவறாக பேசியதை மாமன்ற உறுப்பினர் வாபஸ் வாங்க வேண்டும்” என கேட்டுக்கொணார்.

இதைத்தொடர்ந்து, “நான் பேசியதை வாபஸ் வாங்குகிறேன் என்று கவுன்சிலர் செந்தில்நாதன் கூறினார். அப்போது, திருச்சி பஞ்சப்பூரில் புதிய மார்க்கெட் கட்டுவதாக கூறியுள்ளீர்கள். அதற்கான விளக்கத்தை கூறுங்கள் என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மேயர் அன்பழகன், “திருச்சி கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டில் வசதிகள் சரிவரவில்லை. பாதுகாப்பு இல்லை. மூட்டைகளை மேலே சுமந்து செல்ல முடியவில்லை’’ என வியாபாரிகள் குறை கூறுகின்றனர்.

இதனால், நாங்கள் அங்கு செல்ல மாட்டோம் என்று வியாபாரிகள் தெரிவித்து விட்டனர். இதை அடுத்து ’’திருச்சி பஞ்சப்பூரில் 21 ஏக்கரில் அனைத்து வசதிகளிடம் கூடிய மொத்தம் மற்றும் சில்லறை கடைகள் அடங்கிய பிரமாண்ட மார்க்கெட் வருகிறது. இதில் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக கத்தி குத்து போல் மேம்பாலமும் கட்டப்படவுள்ளது. போக்குவரத்துக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் கோவிந்தராஜன், “மதிப்பூதியம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் மணிப்பூர் கலவரத்தில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர் ரெக்ஸ் பேசுகையில், “தெரு விளக்கு மற்றும் குடிநீர் பழுது பணியினை மேற்கொண்டு வரும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். நான்கு சாலைகள் சந்திக்கக் கூடிய இடத்தில் வேகத்தடை மற்றும் மஞ்சள் வெள்ளை குறியீடு அமைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

திமுக கவுன்சிலர் செல்வி சுப்பிரமணியன் கூறுகையில், “எனது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு குடி தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டும். நரியன் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். தேவி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில், உயர் மின் கோபுர விளக்கு அமைத்துத் தர வேண்டும். அதே பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் இரும்பினால் ஆன சுற்று படிக்கட்டு வைக்கப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்துள்ளதை சரி செய்து தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, அனைத்து கவுன்சிலர்களும் ஒருமித்து, கட்சிகளுக்கு தகுந்தார்போல் இருக்கைகளை சரி செய்து தர வேண்டும் என தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் 98 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அப்போது 43ஆவது தீர்மானத்தை ஒத்திவைக்குமாறு திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தினர்.

ஆனால், ஒரு மனதாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டித்து மாநகராட்சிக் கூட்டம் முடிந்த பிறகும் இரண்டு திமுக கவுன்சிலர்கள், மாநகராட்சிக் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில் நாதனும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - முறையான முன்னேற்பாடுகள் இல்லாததால் குளறுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.