ETV Bharat / state

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பீகார் ஆய்வுக் குழுவினர்!

author img

By

Published : Mar 5, 2023, 6:59 PM IST

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பீகார் ஆய்வுக் குழுவினர்!
தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பீகார் ஆய்வுக் குழுவினர்!

வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து, பீகார் அரசால் நியமிக்கப்பட்ட 4 பேர் கொண்ட ஆய்வுக்குழுவினர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் செய்தியாளர் சந்திப்பு

திருப்பூர்: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலானது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளதாகவும், பலரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதாகவும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கவலைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய பீகார் அரசு, 4 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

இந்தக் குழு நேற்று (மார்ச் 4) சென்னை வந்த நிலையில், இன்று (மார்ச் 5) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இவ்வாறு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக் குமார், சிறப்பு படை பணி காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், பீகாரைப் பூர்வீகமாக கொண்ட திண்டுக்கல் டிஐஜி அபினவ் குமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தொழில் துறையினர், தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், “திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசிற்கு நன்றி. பீகார் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினோம். இங்கு பல சங்கப் பிரதிநிதிகள் உடன் பேசினோம். தவறான வீடியோக்களை தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவமாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோக்கள் பரவியதன் காரணமாக பயம் உண்டானது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம், மார்ச் மாதம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினார்கள்.

அதில் கட்டுப்பாட்டு அறை தொடங்கியது, ஒலிபெருக்கி மூலம் இந்தியில் அறிவிப்பு வெளியிட்டது, பின்னலாடை நிறுவனங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களைக் கையாண்டது, வதந்தி பரப்பியவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன.

அவர்களுக்கு நன்றி. இந்தியில்தான் இது குறித்து பேசுகிறேன். அதனை ஒளிபரப்பினால் புலம் பெயர் தொழிலாளர்கள் அச்சம் நீங்கும்” எனத் தெரிவித்து மேற்கூறியவற்றை இந்தியில் பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், “ட்விட்டர், யூடியூப், பேஸ்புக் பக்கங்களில் தவறாகப் பதிவிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோக்களை தடை செய்ய வழக்குப் பதிவு செய்து, யூடியூப் மற்றும் ட்விட்டருக்கு பரிந்துரைத்துள்ளோம். பணம் சம்பாதிக்கவும், பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வதந்திகளை பரப்புகின்றனர். அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் பரிந்துரைத்துள்ளோம். கட்டுப்பாட்டு அறைக்கு 600க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் விளக்கம் மட்டுமே கேட்டு வருகின்றனர். புகார் இதுவரை பெறப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "வதந்தி பரப்பியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை" - திருமாவளவன் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.