ETV Bharat / state

இந்தியாவிலேயே இலவசமாக முகக்கவசம் வழங்கும் அரசு தமிழ்நாடு:கடம்பூர் ராஜூ

author img

By

Published : Aug 14, 2020, 3:23 AM IST

kadampur raju
kadampur raju

தூத்துக்குடி: இந்தியாவிலேயே மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிநகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெயிண்டர் கோடீஸ்வரனை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இந்நிலையில், கோடீஸ்வரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவியை அவர்களிடம் வழங்கினார். மேலும், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை, பசுமை வீடு கட்டித்தர பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி வஉசி நகர் நியாய விலை கடையில் விலையில்லா முகக்கவசத்தை கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 957 நியாய விலை கடைகள் மூலம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 120 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், 16 லட்சத்து 71 ஆயிரத்து 909 குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு வீதம் 33 லட்சத்து 43 ஆயிரத்து 818 தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதில், முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 219 நியாய விலை கடைகள் மூலம், 6 லட்சத்து 18 ஆயிரத்து 444 பேருக்கு, 12 லட்சத்து 36 ஆயிரத்து 888 விலையில்லா தரமான முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து கிராமப்புற பகுதியில் உள்ள மக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது. ஓர் உயிரை கூட இழக்க அரசு தயாராக இல்லை.

இந்தியாவிலேயே மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். சிறுவர்கள் முதல் முதியோர் வரை முறையாக முகக்கவசம் அணிய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 100 குழந்தைகளுக்கு உணவளித்து வருகிறேன்: மாணவர்களின் பசியை போக்கும் பள்ளி ஆசிரியை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.