ETV Bharat / state

மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.? அரசிடம் திருவண்ணாமலை விவசாயிகள் கேள்வி

author img

By

Published : Feb 17, 2023, 3:12 PM IST

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

பல மாதங்களாக விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் மாதாந்திர குறை தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று (பிப். 17) விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சரியாக பத்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய விவசாய குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சில அரசு அதிகாரிகள் வராததால் சுமார் ஒன்றரை மணி நேரம் கூட்டம் நடத்தப்படாமல் இருந்ததால், விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிக்கலாம் என்று தங்களுக்கு உள்ளாகவே பேசி கூட்டத்திலிருந்து கலைந்து செல்ல முற்பட்டனர்.

அப்போது திருவண்ணாமலை மாவட்ட துணை ஆட்சியர் வீர் பிரதாப் சிங் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் விவசாயிகளின் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், போளூர், கலசப்பாக்கம், செய்யார், தெள்ளார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை பல மாதங்களாக மனுவாக அளித்தும்; அரசு அதிகாரிகள் இந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், குறிப்பாக விவசாயிகள் வழங்கும் மனுவிற்கு அரசு அதிகாரிகள் உரிய பதிலளிக்காமல் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் கூட்டத்தை கவனிக்காமல் தங்களது செல்போனில் மூழ்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தபால் வாக்குப்பதிவில் முறைகேடா? - தேர்தல் அலுவலர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.