திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பிரபு - கலைச்செல்வி தம்பதியரின் மகன் பி.ஹரிஷ்கண்ணா(10). அந்த பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகாசனப் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்தச் சூழலில் இவர், நின்றபடி பின் நோக்கி வளைந்து, கால் பாதங்களை கைகளால் பிடிக்கக்கூடிய ’சக்கர பந்தாசனம்’ எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 30 முறை செய்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’ ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ஆகிய மூன்று உலக சாதனைப் புத்தகங்களில் இடம் பிடித்தன. சாதனைப் படைத்த பள்ளி மாணவன் ஹரிஷ்கண்ணா, யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை, பள்ளி நிர்வாகமும், சக மாணவர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: 50 வயதில் உலக ஆணழகன் போட்டியில் வென்ற 'தமிழ்நாட்டு ஹல்க்'!