ETV Bharat / state

ஹவுஸ் ஓனருக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் திருட்டு - ஆந்திர தம்பதி கைது

author img

By

Published : Nov 3, 2022, 7:21 PM IST

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூரில் வாடகை வீட்டு உரிமையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை திருடிச்சென்ற ஆந்திரா மாநிலத்தைச்சேர்ந்த தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த தாத்துக்கான்பேட்டை பாரதியார் தெருவைச்சேர்ந்தவர், சுசிலா (65). இவர் தனது தாய் கன்னியம்மாள் (84), மகன்கள் சீனிவாசன், பார்த்திபன், மருமகள்கள் மாலதி, ஹேமாவதி, பேரன் ஹரிஹரன் ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச்சேர்ந்த கணேஷ் (32), லட்சுமி (30) தம்பதியினர், தான் கட்டுமானத்தொழில் செய்து வருவதாகவும், தங்குவதற்கு வீடு வேண்டும் என்றும் கேட்டு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு பணிக்காக மருமகள் ஹேமாவதி, பேரன் ஹரிஹரன் ஆகியோர் சென்றுவிட்டனர். புதிதாக குடிவந்த அந்த தம்பதி வீட்டின் உரிமையாளரான சுசிலா உள்ளிட்ட அனைவரிடமும் நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி இரவு 8 மணியளவில், சுசிலா தனக்கு பால் காய்ச்சி தருமாறு அந்த தம்பதியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த தம்பதி சுசிலா உள்ளிட்ட மற்றவர்களுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனைப்பருகிய அனைவரும் மயங்கிய நிலையில் இருக்கும்போது வீட்டிலிருந்த ஏழரை சவரன் தங்க நகைகளை திருடிச்சென்றனர்.

இதனையடுத்து 13ஆம் தேதி அதிகாலை வேலைக்குச்சென்ற மருமகள் ஹேமாவதி வந்து பார்த்தபோது, வீட்டில் அனைவரும் மயக்க நிலையில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மூதாட்டி சுசிலாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து ஹேமாவதி திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிச்சென்ற தம்பதி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ஆய்வாளர் பத்மஸ்ரீபபி தலைமையில் தனிப்படை காவல் துறையினர் ஆந்திரா மாநிலத்திற்குச் சென்றனர். அங்கிருந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட கணேஷ், லட்சுமி ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து ஏழரை சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை பின் தொடர்ந்து சென்று கழுத்தை அறுக்க முயற்சிக்கும் வாலிபர் - சிசிடிவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.