ETV Bharat / state

"ரூ.3 லட்சம் கொடுத்து சரி கெட்ட நினைத்தார்கள்" - நெல்லை இளைஞர் கொலை வழக்கில் பெற்றோர் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 26, 2023, 10:37 AM IST

Tirunelveli 19 years Youth Murder case
நெல்லை வாலிபர் கொலை வழக்கு

திசையன்விளையை சேர்ந்த 19 வயது முத்தையா கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 லட்சம் ரூபாய் கொடுத்து சரி கெட்ட நினைத்தார்கள் என இளைஞரின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

நெல்லை இளைஞர் வழக்கு தொடர்பாக இளைஞர் தரப்பில் அளித்த பேட்டி

திருநெல்வேலி: திசையன்விளை அடுத்த அப்புவிளையைச் சேர்ந்தவர், கன்னியப்பன். இவரது மகன் முத்தையா. 19 வயதான இவர், அழைப்பிதழ் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரோடு உடன் பணிபுரிந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் முத்தையாவை பார்க்க அப்பெண் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் மாலையில் முத்தையா அப்பெண்ணை அவரது வீட்டில் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பணிபுரியும் நிறுவனத்திற்கு வந்த அப்பெண்ணின் அக்கா கணவர், முத்தையாவை காதலை கைவிடும்படி வற்புறுத்தியதுடன், சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அன்றைய தினம் இரவில் முத்தையா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

இந்த வழக்கு தொடர்பாக முத்தையாவின் நண்பர்களான மதியழகன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக முத்தையா படுகொலை செய்யப்பட்டதாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முத்தையாவின் பெற்றோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, "இந்த வழக்கில் ஆரம்பம் முதலே காவல் துறையினர் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகின்றனர். கட்டாயப்படுத்தி உடலை வாங்க வற்புறுத்துகின்றனர்.

திசையன்விளை பேரூராட்சி தலைவரின் கணவர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் வந்து 3 லட்சம் ரூபாய் தருகிறோம், பெற்றுக் கொண்டு உடலை வாங்கி காரியங்களை செய்யுங்கள் என மிரட்டுகின்றனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும், இந்த கொலைக்கும் தொடர்பில்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்" என்றார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட சமுதாய அமைப்பினர் கூறுகையில், "இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை முறையாக விசாரிக்கவில்லை. ஆகையால், வழக்கை சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்ற வேண்டும். திட்டமிட்டு கொலை செய்த வழக்கை திசை திருப்ப காவல் துறை முயற்சிக்கிறது. மேலும் இதை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டும் விசாரிக்க வேண்டும்.

இதில் முக்கிய சாட்சியாக உள்ள அந்த பெண்ணை குடும்பத்தில் இருந்து மீட்டு காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தெரித்தனர். மேலும், தமிழ்நாட்டில் ஆணவக்கொலை இல்லை என தெரிவிப்பதற்கான முயற்சியில் காவல் துறை ஈடுபடுகிறது. இதில் அரசியல் தலையீடுகள் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை பெறப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே முத்தையா உயிரிழந்ததாக காவல் துறை தெரிவிக்கும் நிலையில், தவறான தகவல்களை கூறி வழக்கை திசை திருப்ப முயல்வதாக கொலை செய்யப்பட்டவரின் பெற்றோர் மற்றும் சமுதாய அமைப்புகள் கூறுவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நேற்று வரை உயிரிழந்த இளைஞர் முத்தையா மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த காரணத்தால், பெண்ணின் வீட்டார் ஆணவக்கொலை செய்து விட்டதாகக் கூறி, அவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று இக்கொலை சாதியப் படுகொலை இல்லை என எஸ்.பி அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு மின்சார வாரியத்துறை மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.