ETV Bharat / state

பூரண மதுவிலக்கு எங்கே?, நீட் தேர்வு ரத்து எங்கே? - கேள்விகளை அடுக்கிய கிருஷ்ணசாமி

author img

By

Published : Jul 12, 2023, 3:26 PM IST

புதிய தமிழகம் கட்சி சார்பில் மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
புதிய தமிழகம் கட்சி சார்பில் மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில், 'மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான கிருஷ்ணசாமி பங்கேற்று பேசினார்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

தேனி: புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய மருத்துவர் கிருஷ்ணசாமி திமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம், நீட் தேர்வு ரத்து செய்வோம் என கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆயிற்று என கேள்வி எழுப்பி உள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பங்கேற்று, 'மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான கிருஷ்ணசாமி பங்கேற்றார். இதில் மருத்துவர் கிருஷ்ணசாமி மதுவினால் ஆண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் நோய்கள் குறித்த புத்தகத்தை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கட்சியினர் உட்பட அனைவரும் 'மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்' என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய மருத்துவர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் மதுவால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரழிந்து வருவது குறித்தும், தமிழகம் மதுவால் பின்னோக்கி செல்வதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், தற்பொழுது ஆட்சியில் உள்ள திமுக அரசு சட்டமன்றத் தேர்தலின்போது அவர்களது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று கூறி வாக்குகளைப் பெற்று தற்பொழுது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏன் இன்னும் மதுவிலக்கு கொண்டு வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினர். ஆனால், தற்பொழுது ஆட்சிக்கு வந்தவுடன் அதை செய்ய மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய மருத்துவர் கிருஷ்ணசாமி தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு நீட் தேர்வு குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தரப்படும் எனக்கூறினார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்தது. இன்னும் மூன்று மாதங்கள் கழித்து தான் அந்த ஆயிரம் ரூபாய் தரப் போகிறார்கள். இதற்கு பேரா ஆட்சி? என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தேனியில் நடந்த சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்.. பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.