நீலகிரி: குன்னூரில் வசித்து வருபவர் சகுந்தலா. ஓய்வு பெற்ற பள்ளி ஊழியர். இவர் குன்னூர் சந்தைக்கு மினி பஸ்ஸில் சென்றுள்ளார். சந்தையை வந்தடைந்த பிறகு, தான் கொண்டு வந்த பணப்பையை காணாமல் தேடியுள்ளார். பணப்பையின் உள்ளே 1.5பவுன் நகையும், ரூ. 5 ஆயிரம் பணமும் இருந்துள்ளது.
நீண்ட நேரம் தேடியும் பணப்பை கிடைக்காததால், அங்குள்ள வியாபாரிகள் சங்கத்திலும், குன்னூர் காவல்நிலையத்திலும் இதுகுறித்து புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வியாபாரிகள் சங்கத்தினர் பணப்பையை கண்டால் ஒப்படைக்குமாறு, ஒலிபெருக்கியில் அறிவித்தனர். காவல்துறையினரும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இருப்பினும் தொலைந்த பணப்பை கிடைக்கவில்லை. இந்நிலையில் சிற்றுந்து ஓட்டுநர் பிரதாப், நடத்துநர் ஜுவா ஆகியோர் மூதாட்டியை நேரடியாக சந்தித்துள்ளனர். அப்போது பயணத்தின்போது தவறவிட்டதாக கூறி, மூதாட்டியிடம் பணப்பையை ஒப்படைத்தனர்.
தொடர்ந்து வியாபாரிகள் சங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கும், காவல்துறையினருக்கும் மூதாட்டி நன்றி தெரிவித்தார். தற்போது மூதாட்டியிடம் பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இதையும் படிங்க: தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர் கைது