தஞ்சாவூர்: சர்வதேச அருங்காட்சிய தினம், ஆண்டு தோறும் மே மாதம் 18-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் தஞ்சாவூரில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை கொண்டாடும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமம், சரஸ்வதி மஹால் நூலகம், மற்றும் கலைக்கூடம் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 முதல் 21-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகம் மற்றும் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடம் ஆகிய இரண்டு இடங்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில் எனது பாரம்பரியம் என்ற தலைப்பில் பொதுமக்களின் பண்டைய கலைப் பொருட்கள் கண்காட்சி, அருங்காட்சியக நடைபயணம், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான புகைப்பட போட்டி, அருங்காட்சியங்களின் வரலாறு, பொதுமக்களுக்கான பணிமனை மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சி ஆகியவை ஒவ்வொரு நாளும் நடத்தப்பட உள்ளன.
இலவச அனுமதியுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டு பயன் பெற்று வருகின்றனர். மேலும், அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம், சங்கீத மஹால், மணிக்கோபுரம், பளிங்கு கல்லால் ஆன சரபோஜி மகாராஜா முழு உருவச்சிலை, சுவரோவியம் மற்றும் தஞ்சை பெரிய கோவிலை போன்று விமான அமைப்புடைய ஆயுத கோபுரம் இவை அரண்மனையின் ஒரு பகுதியாகும்.
மேலும், 190 அடி உயரம் உடைய ஏழு நிலை கொண்டதாக, எடுப்பாக இந்த கோபுரம் காட்சியளிக்கிறது. அதையும் மாணவர்கள் கண்டு ரசித்தனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு கலைக் கூடத்தில் உள்ள கருங்கல்லால் ஆன சுவாமி சிற்பங்கள் மற்றும் பஞ்சலோக சிற்பங்களின் சிறப்புகள், வரலாறுகள் ஆகியவை குறித்து மூத்த சுற்றுலா வழிகாட்டி பேராசிரியர் ரங்கராஜன் அவர்கள் விளக்கம் அளித்தார்.
இதன் மூலம் மாணவர்கள் வரலாறு குறித்த தெளிவான புரிதலை பெற உதவியாக இருந்தது. மேலும், கலைக்கூடத்தில் சிறப்பு அம்சமாக ரிஷப வாகனத்தேவர் திருவெண்காடு 11-12 ஆம் ஆண்டு பஞ்சலோக சிலையில், ரிஷப வாகனத்தேவர் பின்புறம் சிகை அலங்காரம் அழகாக பின்னப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது. இதைப்போல் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் சார்பில் எனது பாரம்பரியம் என்ற தலைப்பில் பண்டைய கால கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் மன்னர் காலத்தில் உள்ள வாள், தொட்டில், சாமரம், நகைகள் செய்ய பயன்படும் அச்சு, மரத்திலான நாற்காலி, மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர் ஆகிய தலைவர்களின் அரிய புகைப்படங்கள், தாம்பாளம், ஆட்டுக்கல், மரப்பாச்சி பொம்மை ஆகியவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு சர்வதேச அருங்காட்சியக தின நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து, பண்டைய கால பொருட்களையும் பார்வையிட்டார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார், கலைக்கூட காப்பாளர் சிவக்குமார், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகர், இன்டாக் பாரம்பரிய சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், ஆசிரியை தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பற்ற ரயில்வே பாலம்... பொறுப்பை தட்டிக் கழிக்கும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வேத்துறை... எம்.பி புகார்