ETV Bharat / state

சேலத்தில் பஞ்சலோக சிலைகளை திருடிய போலி சாமியார் கைது!

author img

By

Published : May 29, 2023, 2:20 PM IST

திருடப்பட்ட பஞ்சலோக சிலைகள் மீட்பு
திருடப்பட்ட பஞ்சலோக சிலைகள் மீட்பு

சேலம், தாரமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் கடந்த வாரத்தில் திருடு போன 8 பழங்கால பஞ்சலோகத்தால் ஆன சிலைகளை காவல் துறையினர் கண்டுபிடித்து, அந்த சிலைகளைத் திருடிய போலி சாமியாரையும் கைது செய்தனர்.

சேலம்: தாரமங்கலம் சாவடி, தெற்கு மாசி வீதியில் அமைந்து உள்ள பூவேல்நாடு மகாஜனத்திற்குச் சம்பந்தப்பட்ட பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பழங்கால பஞ்சலோகத்தால் ஆன ஸ்ரீதேவி, பூதேவி, மூலவரான பெருமாள் மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்ளிட்ட எட்டு சிலைகள் இருந்தன. இந்த 8 சிலைகளும் கடந்த வாரத்தில் திருடு போயின. இதனை அடுத்து தாரமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமலூர் துணை கண்காணிப்பாளர் சங்கீதா, ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த மே 21 ஆம் தேதி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அப்போது குள்ளானூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 50) என்ற போலி சாமியார் மீது காவலருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: சென்னையில் கொடிகட்டி பறக்கும் ஹவாலா பிஸ்னஸ்.. ரூ.3.37 கோடி பணம் சிக்கியது எப்படி?

இதனை அடுத்து அந்த போலி சாமியாரைப் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிலைகளை தன்னால் திருடப்பட்டதை சக்திவேல் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போலி சாமியார் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்த அனைத்து பஞ்சலோக சிலைகளையும் தாரமங்கலம் காவல்துறையினர் கைப்பற்றினார்கள்.

மீட்கப்பட்ட பஞ்சலோக சிலைகள்
மீட்கப்பட்ட பஞ்சலோக சிலைகள்

இதை அடுத்து போலி சாமியார் சக்திவேலிடம் தாரமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், பெருமாள் கோயிலில் உள்ள மடத்தில் போலி சாமியார் சக்திவேல் பல நாட்களாக இரவில் படுத்துத் தூங்கி உள்ளார் என்பதும் அங்கு பஞ்சலோக சிலைகள் இருப்பதைத் தெரிந்துகொண்டு அவர் பூட்டை உடைத்துத் திருடியதும் தெரிய வந்துள்ளது.

மேலும் சக்தி வேலிற்குச் சொந்தமான இடத்தில் கோயில் கட்டி பூஜை செய்ய இந்த பஞ்சலோக சிலைகளைத் திருடியதாக விசாரணையில் அவர் ஒப்புக் கொண்டு உள்ளார். கோயிலின் பூட்டை உடைத்து பஞ்சலோக சிலைகளைத் திருடியது அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இது என்னடா புது டெக்னிக்கா இருக்கு..உறவினர் போல வீடு புகுந்த பர்தா கொள்ளையர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.